தென்காசியில் இன்று முதல் செப்.2 வரை 144 தடை..ஆட்சியர் உத்தரவிட்ட காரணம் என்ன தெரியுமா?

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஒண்டிவீரன் வீர வணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டெம்பர் 1ஆம் தேதி மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில், இன்று காலை 6 மணி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணி வரை 15 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் 20ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 2ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியுடன் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தற்போது குற்றால சீசன் காரணமாக மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், இம்மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.