அதிமுக ஆட்சியின் ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒருநபர் கமிட்டி அறிக்கை இன்று தாக்கல்

சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அளிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே  ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைய அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ரூ.5,390 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் தற்போது அளிக்கப்பட்ட தொகை ரூ.3,969 கோடி ஆகும். இந்நிலையில் மத்திய அமைச்சகத்தில் இருந்து ரூ.1,421 கோடி வர வேண்டி உள்ளது. இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பது,  கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் சென்னை மிதந்ததே சான்றாக கருதப்பட்டது சென்னை தியாகராய நகரில் மழைநீர் தேங்கி நின்றது.

சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது. அதை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்படும் என  அறிவித்தார். . அதைத்தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை விசாரிக்க கடந்த மார்ச் மாதம் 2ந்தேதி  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம்  அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி  டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம்  சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம், தஞ்சை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய 11 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட்  சிட்டி திட்ட பணிகள்  மற்றும் முடிவடைந்த ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு அறிக்கை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டேவிதார் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.