மும்பை : பாலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் டாப்சி தற்போது ‘Dobaaraa’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதே சமயம் பாலிவுட்டில் ரிலீசாகும் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியையும், நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றன. சமீபத்தில் ரிலீசான அமீர்கானின் லால் சிங் சத்தா, அக்ஷய் குமாரின் ரக்ஷா போன்ற படங்களின் ஓப்பனிங் நன்றாக தான் இருந்தது.
முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருந்ததால் இனி வரும் நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் கலெக்ஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளே அதள பாதாளத்திற்கு சென்றது. இதற்கு பல வித காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் சரியான காரணம் இது தான் என யாரும் இதுவரை தெளிவாக சொல்ல முடியவில்லை.
இதற்கிடையில் ஒவ்வொரு பாலிவுட் படம் ரிலீசாகும் போதும் boycott என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. அதிலும் #BoycottBollywoodMovies என்ற ஹேஷ்டேக் அதிகம் டிரெண்டாகிறது. இது பற்றி நடிகை டாப்சியிடம் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,boycott, டிரோல் செய்வது இதெல்லாம் இப்போது தினமும் நடக்கும் வழக்கமான விஷயமாகி விட்டது. ஒன்று போல் மற்றொன்று என வருகிறது. இது தேடையில்லாத ஒன்று. நான் திரையுலகில் உள்ள மற்றவர்களை பற்றி பேச முடியாது. என்னையும், அனுராக்கையும் பொருத்தவரை இது ஜோக் ஆகி விட்டது.
ரசிகர்கள் விரும்பினால் தியேட்டருக்கு போய் படம் பார்க்கட்டும். அவர்கள் விரும்பவில்லை என்றால் போக வேண்டாம். யாரையும் படம் பார்த்தே தீர வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் boycott முழக்கம் என்பது எனது ரசிகர்களின் விருப்பத்தை, ஆர்வத்தை குறைத்து மதிப்பிடுவது போல் ஆகி விடும் என்றார் டாப்சி.
டாப்சி தற்போது நடித்துள்ள ‘Dobaaraa’படத்தை அனுராக் காஷ்யாப் இயக்கி உள்ளார். சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர் படமான இந்த படம் கடந்த வாரம் ரிலீசாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.