2024 தேர்தலில் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளர்? – ஐக்கிய ஜனதா தளம் விளக்கம்!

“யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்; பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் நிதிஷ் குமார் இல்லை” என, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலன் சிங் தெரிவித்து உள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் விலகியதில் இருந்தே, 2024 ஆம் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட உள்ளதாக பல்வேறு யூகங்கள் அவரை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இது குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர் நிதிஷ் குமார், “பிரதமர் வேட்பாளர் போட்டியில் தான் இல்லை என்றும், முதலில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்தார். பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக, பல முறை, முதலமைச்சர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து விட்டார்.

இதற்கிடையே, அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், “பிரதமர் வேட்பாளர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் நிதிஷ் குமாரிடம் இருப்பதாகத்” தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில், முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலன் சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை நாங்கள் பார்க்கவில்லை. மேலும் அவர், பிரதமர் வேட்பாளருக்கான போட்டியிலும் இல்லை. இது குறித்து நாங்கள் அடிக்கடி தெரிவித்து வருகிறோம். ஆனால், பிரதமர் ஆவதற்கான அனைத்து தலைமைப் பண்புகளும் நிதிஷ் குமாரிடம் இருக்கின்றன.

யார் பிரதமர் என்பதை விட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில் கவனம் செலுத்துவது முக்கியம். பாஜகவை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியில் நிதிஷ் குமார் செயல்படுவார் என நாங்கள் நம்புகிறோம். எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டால், யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். தேஜஸ்வி யாதவின் கருத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். ஆனால் அவர் பிரதமர் வேட்பாளர் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.