சீருடையில் சிறுநீர் கழித்ததால் பள்ளி மாணவன் மீது ஆசிரியர் வெந்நீரை ஊற்றினாரா?

ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா சந்தேகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் அகில் (வயது 7). இவன் கிராமத்தில் உள்ள மடத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் வகுப்பறையில் ஹீலிகப்பா என்ற ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டு இருந்தார். அப்போது அகில் தனது சீருடையில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் ஹீலிகப்பா, அகிலின் உடல் மீது வெந்நீரை பிடித்து ஊற்றியதாக சொல்லப்படுகிறது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அகில், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.

இந்த நிலையில் அகில் மீது ஆசிரியர் வெந்நீரை ஊற்றவில்லை என்றும், கழிவறையில் வாளியில் இருந்த வெந்நீரை தவறுதலாக ஊற்றியதால் அகிலுக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும் அகிலின் தந்தை வெங்கடேஷ் கூறியுள்ளார். ஆனால் வெங்கடேசை, ஹீலிகப்பா மிரட்டியதாகவும், இதனால் பயந்து போன வெங்கடேஷ், ஹீலிகப்பா வெந்நீரை ஊற்றவில்லை என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் ஹீலிகப்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டு கொண்டு உள்ளனர். ஆனால் வெங்கடேஷ் தரப்பில் புகார் எதுவும் தரப்படவில்லை என்றும், புகார் அளித்தால் ஹீலிகப்பாவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.