விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்: காவல் துறை மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு அழைப்பதற்கான வழிமுறைகளையும் வகுத்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பிரகாஷ் உள்ளிட்டோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தங்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று காவல் துறையினர் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரி இருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் மீது அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் இருப்பதாகவும் அது குறித்த விசாரணைக்காகவே அவர்களை அழைத்ததாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குற்ற வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு போதிய அதிகாரங்கள் சட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளதாகவும், எனவே விசாரணை நடைமுறைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்கக் கோரியும் பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி இது போன்ற சூழலில் நீதிமன்றம் தலையிடும் என கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைப்பதற்காக வழிகாட்டு விதிகளை வகுத்தும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டுமெனவும், அவ்வாறு அனுப்பும் போது ஆஜராக வேண்டிய நாள், நேரம், இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் எனவும், விசாரணையின் போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக எழுத்து முறையில் குறிப்பெடுத்து வைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு உள்ளார். விசாரணைக்கு அழைப்பவர்களை துன்புறுத்த கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.