லஞ்ச ஒழிப்புத் துறையின் மனு தள்ளுபடி| Dinamalar

புதுடில்லி :முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.தமிழகத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த வேலுமணி, சென்னை, கோவை மாநகராட்சிகளில் அரசின் பல்வேறு பணிகளுக்கு ‘டெண்டர்’ வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு எப்.ஐ.ஆர்.,களை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலுமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரிக்க கோரிய லஞ்ச ஒழிப்புத் துறையின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். ”இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்கலாம்,” என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.