‘மதுரை தமிழ்ச் சங்க நூலகத்துக்கு 4 ஆண்டுக்கு முன்பு அறிவித்த ரூ.6 கோடி நிதி இதுவரை ஒதுக்கவில்லை’

மதுரை: ‘மதுரை உலக தமிழ்ச் சங்க புதிய நூலகத்துக்கு 4 ஆண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ரூ.6 கோடி நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை’ என உயர் நீதிமன்றத்தில் தமிழ்ச் சங்க இயக்குநர் தெரிவித்தார்.

மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரை உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் புத்தகங்கள், தமிழ் ஆராய்ச்சி புத்தகங்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி புத்தகங்களை வைக்கவும், நூலகத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனர் அன்புச்செழியன் நேரில் ஆஜரானார்.

அவர் கூறுகையில், “புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளை சேர்ந்தோர், தமிழை வளர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் வகையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 26 ஆயிரத்து 35 புத்தகங்கள் உள்ளன. பதிப்பிக்கும் புத்தகத்தின் ஒரு நகல், உலக தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. இங்கு நூலகம் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கப்படும் என 2017-2018 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 2018 பிப்ரவரி 5-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்றார்.

பின்னர் நீதிபதிகள், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத திட்டங்களை கணக்கிட ஆரம்பித்தால், கணக்கீடு செய்ய முடியாத அளவில் இருக்கும் என்றனர்.

மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை ஒரு மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.