3 மணி நேரம் விசாரணை.. ‘வாய்தா’ பட நடிகை குறித்து காதலர் சொன்ன தகவல்கள்!

தற்கொலை செய்துகொண்ட ‘வாய்தா’ திரைப்பட நடிகை தீபாவின் காதலர் சிராஜுதினிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா. இவர் அதேப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தீபாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் ஃபோனை எடுக்காததால், அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தீபாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சென்னை வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image

இதற்கிடையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் நடிகை தீபா கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதும், அது மட்டும் இன்றி அந்தக் கடிதத்தில் “ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் காதல் கைக்கூடவில்லை.. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் வெளியே சென்று விட்டு, ஆட்டோவில் இறங்கி சோர்வாக வீட்டிற்குள் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளும் மற்றும் தீபா தற்கொலை செய்து கொண்ட தகவலை காதலன் மூலமாக தெரிந்து கொண்ட அவரது நண்பர் பிரபாகரன் நடிகை தீபாவின் வீட்டிற்கு பதற்றத்தோடு ஓடக்கூடிய சி.சி.டி.வி காட்சிகளும் வெளியானது.

தீபா மரணத்தில், அவரின் காதலர் சிராஜுதீனுடைய நண்பர் பிராபகரன் மீதும் சந்தேகம் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தீபா தற்கொலை செய்து கொண்டபோது முதல் ஆளாக வந்து கதவை உடைத்துப் பார்த்த பிரபாகரனிடமிருந்து, அவரின் ஐபோன் மீட்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தீபாவின் காதலர் சிராஜுதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து வந்ததாக விசாரணையில் தெரிவித்திருந்தார்.

image

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிராஜுதனிடம் தீபா வாக்குவாதம் செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து சிராஜுதீன் தம்மை உடனடியாக தீபா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தீபாவின் காதலர் சிராஜுதினிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

அதில் தீபாவுக்கு கை மற்றும் கால்களில், சருமம் சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளநிலையில், தீபாவின் நண்பரான பல் மருத்துவர் நிஷா என்பவர் மூலம் தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவரிடம், தீபா சருமம் தொடர்பாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறிய சிராஜுதீன், கடந்த 5 மாதமாக தன்னை ஒருதலையாக நடிகை தீபா காதலித்து வந்ததாகாவும், அவருடைய காதலை ஏற்று கொள்ளவில்லை என, போலீஸ் விசாரணையின் போது தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தீபா மன உளைச்சலில் இருந்ததாக கூறிய சிராஜுதீனிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற போலீசார், தீபா பிரேதப் பரிசோதனை முடிவுக்கு பின், இறுதிகட்ட விசாரணை நடத்தப்படும் என தகவல் தெரிவித்த கோயம்பேடு போலீசார், சருமப் பிரச்னைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.