20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலி! உளுந்தூர்பேட்டையில் சோகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, தடுப்புச் சுவரில் கார் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை ராயப்பேட்டைச் சேர்ந்த ஏஜாஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில், தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக சேலம் சென்றுள்ளார். தனது தாய், சமீம், தங்கை அம்ரீன் மற்றும் சித்தி மகளான சுபேதா. சித்தி நசீம் உள்ளிட்டோருடன் ஏஜாஸ் காரில் சேலத்திற்கு சென்றுள்ளார்.

சேலத்தில், குழந்தையையும், மனைவியையும் பார்த்துவிட்டு, மீண்டும் தனது குடும்பத்தினருடன் ஏஜாஸ் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். இவர்களின் கார், கள்ளக்குறிற்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தது. அப்போது கார் ஓட்டி வந்த ஏஜாஸின் கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென நிலை தடுமாறி மேம்பால தடுப்பச் சுவற்றின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார், சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த ஏஜாஸின் தாய் சமீம், தங்கை அம்ரீன் மற்றும் சித்தி மகளான சுபேதா உள்ளிட்ட 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த ஏஜாஸ் மற்றும் அவரின் சித்தி நசீம் ஆகிய இருவரும் படுகாயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

 Car overturns in ditch near Kallakurichi accident - 3 women killed

இந்த விபத்துக் குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். பின்னர் 20 அடி பள்ளத்தில் இருந்த காரை, கிரேன் உதவியுடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர், உயிரிழந்த ஏஜாஸின் தாய் சமீம், தங்கை அம்ரீன் மற்றும் சித்தி மகளான சுபேதா ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த ஏஜாஸ் மற்றும் அவரின் சித்தி நசீம் ஆகியோரை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் பிறந்த குழந்தையும், தாயையும் பார்த்து விட்டு சென்னை திரும்பியபோது, கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, ஒரே குடும்பத்தைச் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.