ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்: 19 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.

ஆப்கானிதானின் தலைநகர் காபூலில் மேற்குப் பகுதியில் கல்வி நிறுவனம் அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 20-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தேர்வுக்காக மாணவர்கள் படித்து கொண்டிருந்தபோது இந்தக் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பலியானவர்களில் பலரும் மாணவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்களும், ஐஎஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது குண்டுவெடிப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த தாக்குதலையும் ஐஎஸ் அமைப்பு, கிளர்ச்சியாளர்கள் நடத்தி இருக்கலாம் என்று தலிபான்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்தது முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களை முடக்கும் நடவடிக்கையில் தலிபான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.