காந்தி ஜெயந்தி: பிரதமர் மோடி, சோனியா மரியாதை!

வன்முறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக அகிம்சை எனும் ஆயுதத்தை கையில் எடுத்த மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் சார்பில் விழா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதேபோல், மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் வேளையில், அவரது வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்தி செய்தியில், “இந்த காந்தி ஜெயந்தி இன்னும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்தியா ஆசாதி கா அம்ரித் மஹோத்சவை கொண்டாடி வருகிறது. எப்போதும் பாபுவின் கொள்கைகளுக்கு ஏற்ப வாழலாம். காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குமாறும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மற்றும் அமைச்சர், மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.