சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ராகுல் காந்தி வழிபாடு..!

கர்நாடகாவில் 4-வது நாள் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி, மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ’ என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் இந்த பாதயாத்திரை நடந்தது.

இதையடுத்து கடந்த 30-ம் தேதி, சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை வழியாக கர்நாடகத்துக்குள் காங்கிரஸ் பாதயாத்திரை நுழைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாதயாத்திரை மைசூருவுக்கு வந்தது. கர்நாடகத்தில் 4-வது நாளான நேற்று மைசூரு நகரில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

முன்னதாக அவர் சாமுண்டி மலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தார். முன்னதாக சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்துக்கு சென்று மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமியிடம் ஆசி பெற்றார். இதையடுத்து மைசூருவில் உள்ள தேவாலயத்துக்கும், மசூதிக்கும் சென்று பிரார்த்தனை செய்தார்.

இதையடுத்து ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடர்ந்தார். அவருடன் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர். வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையோரங்களில் திரண்டிருந்த மக்களை பார்த்து ராகுல்காந்தி கையசைத்தார்.

இந்த பாதயாத்திரை மண்டியா மாவட்டத்துக்குள் நுழைந்து ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக பாண்டவபுராவுக்கு சென்றது. பாண்டவபுராவில் கரும்பு விவசாயிகளிடம் குறைகளை கேட்ட ராகுல்காந்தி, அவர்களிடம் இருந்து கரும்பு ஒன்றை வாங்கி ருசித்து பார்த்தார். பாதயாத்திரை பாண்டவபுரா பகுதியில் வந்தபோது, பலத்த மழை பெய்தது. கொட்டும் மழைக்கும் நடுவிலும் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடர்ந்தார். நேற்று இரவு மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் ராகுல்காந்தி பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.