மகிஷாசுர சம்ஹாரத்தை காண குலசையில் குவியும் பக்தர்கள்..!

பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசுர சம்ஹாரம் இன்று இரவு நடைபெற இருக்கும் நிலையில்,  பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். 

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா மைசூருக்கு அடுத்தபடியாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 26 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரதம் இருந்து மாலை அணிந்து காளி, குரங்கு, ராஜா, ராணி, உள்ளிடட பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் தனியாகவும் குழுவாகவும் ஊர் ஊராக சென்று நடனமாடி காணிக்கை பெற்றனர்.

விரதமிருந்து வேடமணிந்துள்ள பக்தர்கள், 10 ஆம் திருநாளான இன்று கோவில் உண்டியலில் தங்களது காணிக்கை பணத்தை செலுத்துவது வழக்கம். அதன்படி விரதமிருந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.

தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியான மகிசாசுர சம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவது வழக்கம். கோயில் கடற்கரையில் நடைபெற உள்ள மகிசாசுர சம்ஹார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.