`கலைஞர் கனவு இல்லம் திட்டத்தால் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கும்போது…'- தங்கம் தென்னரசு பெருமிதம்!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அப்பகுதியைச் சேர்ந்த ராணி தனது சேதமடைந்த வீட்டைப் பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் 2024 நவம்பர் மாதம் முறையிட்டார். அவரது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் அந்த வீட்டின் மேற்கூரை ஓடுகள் பெயர்ந்து, மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளே விழுவதால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து வந்தார்.

இதைக் கேட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். `வீடு இன்றி தவிக்கும் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உங்களுக்கு புதிய வீடு வழங்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உறுதியளித்தார். அதன்படி, 2025 ஜனவரியில் ராணியின் பழைய வீட்டின் பட்டா மாறுதல் ஆணையை நேரில் வழங்கினார். 2025, மார்ச் மாதம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் ஆணையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கே.வேலாயுதபுரத்தில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராணியின் புதிய இல்லத்திற்குச் சென்று வாக்கு சேகரித்தவரை கண்ட ராணி, `வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் புதுமனை புகுவிழாவுக்குத் தலைமை தாங்க நீங்கள் கட்டாயம் வர வேண்டும்’ என்று அன்புடன் வரவேற்றார்.

தொடர்ந்து, தங்களின் உதவியால் மட்டுமே இது சாத்தியமானது என்று நன்றி கூறினார். இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, `இது நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுக்காகச் செய்தது. வீடற்றவர்களின் கனவை நனவாக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் எத்தனை ஆயிரம் குடும்பங்களுக்கு ஒளியேற்றியுள்ளது என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கிறேன்.

இந்த திட்டம் எத்தனை பெரிய நன்மைகளைச் செய்துள்ளது என்பதை பார்க்கையில் மனநிறைவாக உள்ளது. இந்தப் புதிய வீட்டில் நீங்கள் தலைநிமிர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனக் கூறினார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தங்கம் தென்னரசு, `மக்களின் புன்னகையில் நிலைபெறும் நல்லாட்சி. அன்று சிதிலமடைந்த நிலையில் இருந்த ராணியின் ஓட்டு வீட்டிற்குள் சென்றபோது, தலைகுனிந்து, உடலைக் குறுக்கிக் கொண்டுதான் உள்ளே நுழையவே முடிந்தது. ஆனால் இன்று முதலமைச்சர் அறிவித்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தால், ராணி தனது புதிய இல்லத்தில் தலைநிமிர்ந்து பெருமிதத்துடன் நிற்பதைக் காணும்போது அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய திருப்தியுடன், அவர்களின் புன்னகையில் நம் ஆட்சியின் வெற்றியைக் காண்கிறோம். எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நம் திராவிட மாடல் ஆட்சி எப்போதும் விளிம்புநிலை மக்களுக்கான அரணாகத் தொடரும்’ என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.