கான்கேர்: சட்டீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டம் பானுபிரதாப்பூரை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் மாண்டவி, மாநில சட்டப் பேரவையின் துணை சபாநாயகராக இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மனோஜ் மாண்டவி காலமானார்.
இவரது மறைவுக்கு முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த மத்தியப் பிரதேச மாநிலமாக இருந்து இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 1998ல் முதல்முறையாக மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை எம்எல்ஏவாகவும், மாநில அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சட்டீஸ்கர் காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா கூறுகையில், ‘தம்தாரியில் உள்ள பத்தேனா மருத்துவமனையில் மனோஜ் மாண்டவி உயிரிழந்தார். தற்போது அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்’ என்றார்.