கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் ஊடாடல் , நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் ஆறாவது உச்சி மாநாட்டின் …..

கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் ஊடாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் ஆறாவது உச்சி மாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக, அஸர்பைஜான் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்{ஹன் பைரமோவ் மற்றும் கஸகஸ்தான் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அடில் துர்சுனோவ் ஆகியோருடன் 2022 அக்டோபர் 13ஆந் திகதி சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

கஸகஸ்தானின் வெளிவிவகார பிரதி அமைச்சருடனான சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, ஆசியாவில் ஊடாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் ஆறாவது உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடாத்தியமைக்காக கஸகஸ்தானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் இருதரப்பு ஆலோசனைகள் கடைசியாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நடாத்தப்பட்டமையை சுட்டிக்காட்டி, குறித்த ஆலோசனைகளை நடாத்துவதற்கு இது சரியான தரனமாகும் எனக் குறிப்பிட்டார்.

இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறைகளில் ஒத்துழைப்பதற்கான வழிகளை ஆராயுமாறும் இராஜாங்க அமைச்சர் பாலசூரிய கஸகஸ்தானிடம் கோரிக்கை விடுத்தார். ஆசியாவில் ஊடாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் ஆறாவது உச்சி மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் பங்கேற்பைப் பாராட்டிய வெளிவிவகார பிரதி அமைச்சர், கஸகஸ்தான் ஆற்றல் துறையில் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார். பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் உறவுகள் தொடர்பான மெய்நிகர் இருதரப்பு ஆலோசனைகளை முன்னோடியாக நடத்தலாம் என்றும், இராஜாங்க அமைச்சர் பாலசூரியவை 2023 இல் கஸகஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறும் பிரதி வெளிவிவகார அமைச்சர் துர்சுனோவ் அழைப்பு விடுத்தார்.

அஸர்பைஜான் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஹூன் பைரமோவ் உடனான சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் பாலசூரிய இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அவருக்கு விளக்கமளித்தார். ஆற்றல் மற்றும் சக்தி துறையில் உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்பட்டன. அஸர்பைஜான் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருப்பதால், பெட்ரோலியத் துறையை தாராளமயமாக்கும் இலங்கையின் முயற்சிகள் குறித்து கவனத்தை ஈர்த்த இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களுக்கு எரிபொருள் இறக்குமதி மற்றும் சில்லறை விற்பனைச் சந்தையைத் திறப்பதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இரு தரப்பும் மேலும் ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடரவும், தற்போதுள்ள உறவுகளை விரிவுபடுத்துவதற்காக இருதரப்பு ஆலோசனைப் பொறிமுறையை நிறுவவும் ஒப்புக்கொண்டன.

2022 ஒக்டோபர் 12ஆந் திகதி, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, கஸகஸ்தானில் உள்ள இலங்கைக்கான கௌரவத் தூதுவர் யெர்ஷான் ஏ. அகதாயேவுடன் இலங்கைக்கும் கஸகஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து கலந்துரையாடினார்.

இராஜாங்க அமைச்சரின் பதில் மேலதிக செயலாளரும் பொது இராஜாங்க செயலாளருமான சித்தாரா கான் இந்த சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் பாலசூரியவுடன் இணைந்திருந்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 அக்டோபர் 16

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.