தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2-வது நாளாக கனமழை: தீபாவளி பண்டிகை விற்பனை முடங்கும் என்று சாலையோர வியாபாரிகள் கலக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2-வது நாளாக கொட்டிய கனமழையால் தீபாவளி பண்டிகை விற்பனை பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 2-வது நாளாக நேற்று மாலை புதுக்கோட்டை நகர பகுதி முழுவதும் சுமார் 2 மணி நேரமாக அடைமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளை மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சி இருக்கும் நிலையில் மாலை நேரத்தில் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு செல்ல முடியாதா அளவிற்கு கனமழை பெய்தது. இதனால், தீபாவளி பண்டிகையை நம்பி கீழ்ராஜ வீதி, மேலராஜ வீதி, தெற்குராஜ வீதி, வடக்குராஜ வீதி உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் கடை அமைத்திருக்கும் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.    

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழையால் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக சாலையோரம் அமைக்கப்பட்ட  ஆயத்தடைகள் விற்பனை பாதிக்கப்படுவதாக சிறு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு 1 மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தீபாவளிக்காக தென்காசி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்து சாலையோரங்களில் தற்காலிகமாக ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்து வந்த வியாபாரிகள் விற்பனை முடங்கி இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்னும் 4 நாட்களில் மழை பெய்யாமல் இருந்தால்தான் வியாபாரத்தில் லாபம் பார்க்க முடியும் என்று வியாபாரிகள் கூறினர். மழை தொடர்ந்தால் தீபாவளி விற்பனையில் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.