தேர்தல் ஆணையம் தகுதி நீக்க உத்தரவு – இம்ரான் கான் மேல் முறையீடு!

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் விதித்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மேல் முறையீடு செய்துள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறி வருகிறார்.

இதற்கிடையே, இம்ரான் கான் பதவியில் இருந்த போது அரபு நாடுகளுக்கு சென்ற போது, அங்குள்ள ஆட்சியாளர்களிடம் இருந்து விலை உயர்ந்த கிராப் கைக்கடிகாரம், பேனா, மோதிரம், ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகளை, அதிக விலைக்கு முறைகேடாக விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை, இம்ரான் கான் வருமான வரி கணக்கு தாக்கலில் மறைத்து ஊழல் புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

துப்பாக்கி வாங்க, விற்க தடை: பிரதமர் அதிரடி உத்தரவு!

இது தொடர்பாக தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆளுங்கூட்டணி எம்பிக்கள், நாடாளுமன்ற சபாநாயகர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பிடம் புகார் செய்தனர். உடனே, அவர் அதை அரசியல் சாசன சட்டம் பிரிவு 62 மற்றும் 63-ன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக அந்த நாட்டின் தேர்தல் கமிஷனின் பார்வைக்கு அனுப்பினார். இதையடுத்து இந்த புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.

அதில், இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்து பதவியைப் பறித்தது. மேலும் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் நின்று எம்.பி. பதவி வகிக்கவும் தடை விதித்தது. அதுமட்டுமின்றி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி இம்ரான் கான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.