சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மது குடித்துவிட்டு வந்து பணி செய்வதாக பல இடங்களில் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இனியும் அவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், “குடித்துவிட்டு பணிக்கு வரும் ஊழியர்களால் பயணிகளிடையே கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், அரசு பேருந்துகளை மக்கள் தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது. பணியின் போது குடித்திருப்பது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.பணிநீக்கம் உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மேலும் மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், பிற பணியாளர்களுக்கு 26 குறிப்புகள் கொண்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பணியின் போது மது அருந்திவிட்டு வந்தாலோ, புகைப் பிடித்தாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
பணிமனைக்கு உள்ளே 5 கி.மீ. வேகத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பணியில் இருக்கும்போது செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் . பணிமனைக்குள் பேருந்து செல்லும்போது ஓட்டுநர், நடத்துனர், பாதுகாவலர் மூவரும் பேருந்தில் தீப்பற்றக் கூடிய பொருட்களோ, வெடிப்பொருட்களோ இருந்தால் அவற்றை காவல் துறை உதவியுடன் அகற்ற வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.