காட்டில் விட்ட 24 மணி நேரத்தில் வேட்டையாடிய சிவிங்கி புலிகள்: மானை இரையாக்கின

சியோபூர்: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ உயிரியல் பூங்கா வனப்பகுதியில் விடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிவிங்கி புலிகள் முதல் முறையாக இரைக்காக வேட்டையாடி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952ம் ஆண்டு ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து 3 ஆண், 5 பெண் சிவிங்கி புலிகள் கடந்த செப்டம்பர் மாதம், மத்திய பிரதேச மாநிலம் சியோப்பூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி தனது பிறந்தநாளையொட்டி அவற்றை கூண்டில் இருந்து திறந்து விட்டார்.

இந்த சிவிங்கி புலிகள் தனித்தனியாக உயிரியல் பூங்காவில் குறிப்பிட்ட பகுதியில் அடைக்கப்பட்டு, இந்திய சூழலுக்கு பழக்கப்படுத்தப்பட்டன. இவற்றுக்கு நாள்தோறும் எருமை இறைச்சி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல் கட்டமாக 50 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பின், ஆரோக்கியத்துடன் உள்ள 2 ஆண் சிவிங்கி புலிகள் குனோ உயிரியல் பூங்காவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டன. சிவிங்கி புலிகளின் வேட்டை திறன் குறித்து அதிகாரிகள் கவலையோடு இருந்த நிலையில், விடுவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அவை இரைக்காக வேட்டையாடி உள்ளன. முதல் முறையாக சிவிங்கி புலிகள் இந்திய வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.