இந்தூர்: மத்திய பிரதேசத்தில் வீட்டில் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்த போது தனது மனைவியை சூடான சமையல் எண்ணெயில் தள்ளிய கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகதியை சேர்ந்தவர் சுதாமா ஹிர்வே (46). இவர் டவர் ரோடு சதுக்கத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது பணியை முடித்துக் கொண்டு அன்றிரவு வீடு திரும்பினார். மதுபாட்டில்களுடன் வந்த அவர், தனது அறைக்கு சென்று மது அருந்தினார். சிறிது நேரம் கழித்து வாந்தி எடுக்க ஆரம்பித்தார். வாந்தியை கட்டுப்படுத்துவதற்காக, அவரது மனைவி ரஜினி மாத்திரைகளை கொடுத்தார். இருந்தும் அவர் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஆவேசப்பட்ட சுதாமா ஹிர்வே, தன்னுடைய வாந்திக்கு மனைவி கொடுத்த மாத்திரை தான் காரணம் எனக்கூறி, அவரை தாக்க முயன்றார்.
அந்த நேரத்தில் சமையல் அறையில் அவரது மனைவி பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தார். திடீரென சமையல் அறைக்குள் சென்ற சுதாமா ஹிர்வே, தனது மனைவியின் தலைமுடியை பிடித்து, சூடான சமையல் எண்ணெயில் தள்ளினார். இதனால் அலறிதுடித்த அவரது மனைவி, கணவரின் பிடியில் இருந்து தப்பி வெளியேறினார். அவரது தலை மற்றும் முகம் முழுவதும் தீக்காயம் அடைந்ததால் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து இந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் யோகேஷ் தோமர் கூறுகையில், ‘மனைவியை சூடான எண்ணெயில் தள்ளிவிட்ட சுதாமா ஹிர்வேவை கைது கைது செய்து விசாரித்து வருகிறோம். தீக்காயம் அடைந்த ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.