புதுடில்லி, மொபைல் போன்களுக்கு புதிய எண்களில் இருந்து வரும் அழைப்பை அடையாளம் கண்டு தெரிவிக்கும், ‘காலர் ஐடென்டிட்டி’ சேவையை, ‘டிராய்’ எனப்படும், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
நம், ‘மொபைல் போன்’களில் சேமித்து வைக்கப்படாத புதிய எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பவரின் எண்கள் மட்டுமே திரையில் தோன்றும். அழைப்பை ஏற்பதற்கு முன், அவர் யார் என்பதை அறிந்துகொள்ளும், ‘காலர் ஐடென்டிட்டி’ சேவையை பல்வேறு தனியார் நிறுவனங்கள் அளித்து வருகின்றன.
இதில், ஐரோப்பிய நாடான சுவீடனை சேர்ந்த மொபைல் செயலி நிறுவனமான, ‘ட்ரூ காலர்’ செயலியை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இதற்கு போட்டியாக, உள்நாட்டிலேயே காலர் ஐடென்டிட்டி சேவை அளிக்கும் செயலியை, டிராய்’ எனப்படும், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளிக்க உள்ளது.
தொலை தொடர்பு நிறுவனங்களிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் விபரங்களின் அடிப்படையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று வாரங்களில் இது பயன்பாட்டுக்கு வர உள்ளதாக டிராய் அமைப்பின் தலைவர் பி.டி.வகேலா தெரிவித்தார்.
”இது, ட்ரூ காலர் நிறுவனத்துக்கு எந்த விதத்திலும் போட்டியாக இருக்காது,” என, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் மமேதி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement