ஈரோடு: வெளிமாநில சரக்கு லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! – ரூ.100 கோடி மதிப்பிலான பொருள்கள் தேக்கம்

ஈரோட்டிலிருந்து ஜவுளி, மஞ்சள், ஆயில், தானியங்கள், மருந்து உள்ளிட்டவை கனரக சரக்கு லாரிகள் மூலமாக டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஈரோடு பார்க் ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் கர்நாடகா மற்றும் வெளிமாநிலங்களை தலைமையிடமாக கொண்டு கிளை நிறுவனங்களாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு லாரிகளில் வரும் சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே சுமை தூக்கும் பணியாளர்களை நியமித்து வைத்துள்ளன.

இந்நிலையில் பவானி சாலையில் உள்ள தனியார் சரக்கு லாரிகளின் போக்குவரத்து  நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு முன்பணமும், தீபாவளி போனஸும் வழங்கவில்லை எனக் கூறி அங்கு பணிபுரிந்து வரும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 3 நாள்களுக்கு முன்பு சரக்குகளை இறக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை அந்நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. மேலும் அவர்களுக்கு  பதிலாக வடமாநில  தொழிலாளர்களை சுமைதூக்கும் தொழிலாளர்களாக நியமித்தனர்.

தேக்கமடைந்துள்ள சரக்குகள்.

இதனால் கொதிப்படைந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து, நேற்று பவானி சாலையில் பல்வேறு சுமைதூக்கும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தனர். இதை கண்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் சிலர், அசோசியேசன் செயலாளர் பிங்களன் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த பிங்களன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுமைதூக்கும் தொழிலாளர்களின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்தன. இதையடுத்து ஈரோட்டில் இன்று நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் பவானி ரோடு, பார்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் லாரிகளில் பொருள்களை ஏற்ற மறுத்துவிட்டன.

சாலைமறியலில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள்

இது குறித்து ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் தலைவர் கலைமணி கூறுகையில், “500-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற சங்கத்தின் செயலாளர் பிங்களன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு நாங்கள் விரோதிகள் அல்ல. அவர்களுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கும்போது தீபாவளி போனஸும், அட்வான்ஸ் தொகையும் தரவில்லை என்ற காரணத்தைக் கூறி எங்களை எதிர்த்து போராடுகின்றனர். இதற்கு சுமுகமான தீர்வு காணத் தயாராக இருந்தபோது, சங்கத்தின் நிர்வாகியைத் தாக்கியுள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது.
இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 100 லாரிகள் ஈடுபட்டுள்ளன. தற்போது  வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய மஞ்சள், ஜவுளி ரகங்கள், கிரே துணிகள், ஆயில், அரிசி, தானிய வகைகள் என சுமார் ரூ100 கோடி மதிப்பிலான பொருள்கள் தேக்கமடைந்துள்ளன” என்றார்.

ஈரோடு மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய வேண்டிய 100 லாரிகளின் பொருள்கள் புக்கிங் செய்யாமல் தேக்கமடைந்துள்ளன. வெளிமாநிலங்களிலிருந்து லோடு ஏற்றி வந்த 50 லாரிகளின் பொருள்களும் இறக்கி வைக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வர்த்தகர்கள் கவலையடைந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.