மூடப்படாத மழைநீர் கால்வாய்… தவறிவிழுந்த மாடுகள்! அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்

மதுரவாயில் தாம்பரம் பைபாஸ் சாலையோரம் உள்ள மழை நீர் கால்வாய் முறையாக மூடப்படாமல் இருப்பதால் ஒரு பசு மாடு மற்றும் ஒரு எருமை கன்று தவறி விழுந்துள்ளது.

சென்னை மதுரவாயில் தாம்பரம் பைபாஸ் சாலை இருபுறங்களிலும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் முறையாக மூடப்படாததால் இங்கே அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாக  புகார் எழுந்துள்ளது. குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய் மற்றும் மகள் இந்த சாலை அருகே இருந்த கால்வாயில் சிக்கி உயிரிழந்தனர்.

image
சமீபத்தில் இப்பகுதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இந்த வடிகால் முறையாக மூடப்படாமல் கிடப்பதால் மீண்டும் விபத்துக்கள் ஏற்பட தொடங்கியுள்ளது. பைபாஸ் சாலை நொளம்பூர் அருகே ஒரு எருமை கன்று மற்றும் பசு மாடு ஒன்று தவறி விழுந்தது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜேஜே நகர் தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி பொக்லைன் உதவியுடன் பசு மாட்டை மீட்டனர்.
கால்வாயில் சிக்கிக்கொண்ட எருமை கன்று அங்கும் இங்குமாய் கழுவு நீரில் போக்கு காட்டியது. பின்பு தீயணைப்பு வீரர் ஒருவர் கயிறு கட்டிக் கொண்டு கால்வாய்க்குள் கழிவுநீரில் இறங்கி கன்று குட்டியை பத்திரமாக மீட்டார். கால்நடை இரண்டையும் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். திறந்து கிடக்கும் கால்வாயால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் நிலையில் இதனை கருத்தில் கொண்டு பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.