திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த ஒட்டன்சத்திரத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் ஏற்றுமதிக்கான முருங்கை சாகுபடி மற்றும் பதப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

அப்பொழுது விழா மேடையில் பேசிய சக்கரபாணி “முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ரூபாய் 7000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மின் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டது. அவர் வழியில் தற்பொழுது முதல்வர் ஸ்டாலினும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நீதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முருங்கை அதிக அளவில் சாகுபடி நடைபெறும் திண்டுக்கல், திருப்பூர், கரூர், அரியலூர், மதுரை, தேனி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களை ஒருங்கிணைத்து முருங்கை ஏற்றுமதி மண்டலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முருங்கையில் இரும்பு சத்து உட்பட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளதால் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் முருங்கைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே ஏற்றுமதிக்கான முருங்கை சாகுபடி தொழில் நுட்பங்களை அறிந்து விவசாயிகள் அதிகளவில் முருங்கை சாகுபடி செய்ய வேண்டும்” என விழா மேடையில் பேசினார்.