“என் கணவர் உனக்கு; உன் கணவர் எனக்கு…!" – நீதிபதிகளை தலைச்சுற்ற வைத்த சகோதரிகள் – என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம், ததியா பகுதியைச் சேர்ந்த கிரிஜா சங்கர், `மாயாராம் என்பவர் தனது மனைவியையும் மகளையும் கடத்திச் சென்று சட்டவிரோதமாகப் பிணைக் கைதிகளாக வைத்துள்ளார்’ என குவாலியார் உயர் நீதிமன்றத்தில் ‘ஆட்கொணர்வு’ மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

போலீசார் அந்தப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வழக்கு முற்றிலும் புதிய திருப்பத்தைப் பெற்றது. நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்த அந்தப் பெண், “என்னை யாரும் கடத்தவில்லை. நான் எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே எனது மைத்துனரான (தங்கையின் கணவர்) மாயாராமுடன் வாழ்ந்து வருகிறேன்.

திருமணம்
திருமணம்

எனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்டேன். இனிவரும் காலங்களில் எனது மைத்துனருடனேயே வாழ விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் மற்றொரு ஆச்சரியமாக, மாயாராமின் மனைவியான இளைய சகோதரியும் நீதிமன்றத்தில் ஆஜராகி, “எனது அக்கா எனது கணவருடன் வாழ்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

உண்மையில், நானும் எனது அக்காவின் கணவரான கிரிஜா சங்கர் மீது விருப்பம் கொண்டுள்ளேன். அவருடன் இணைந்து வாழவே நான் விரும்புகிறேன்” என்று கூறி அனைவரையும் வாயடைக்க வைத்தார்.

இந்த இரண்டு சகோதரிகளுக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், தற்போதைய திருமண வாழ்க்கையில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், பரஸ்பர சம்மதத்துடன் கணவர்களைப் பரிமாறிக்கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போவதாகவும் அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர். சட்ட வல்லுநர்களே எதிர்பார்க்காத இந்த வாதம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

வழக்கை விசாரித்த குவாலியர் உயர் நீதிமன்ற அமர்வு, “இரு பெண்களும் மேஜர் என்பதால் அவர்கள் தங்கள் வாழ்க்கை குறித்த முடிவைச் சுயமாக எடுக்க உரிமை உண்டு. இது கடத்தல் வழக்கு அல்ல. இது பரஸ்பர சம்மதத்துடன் எடுக்கப்பட்ட ஒரு முடிவு. இதில் எவரும் பிணைக் கைதிகளாக வைக்கப்படவில்லை” எனக் கூறி, கிரிஜா சங்கர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கணவர்களைப் பரிமாறிக்கொள்ளும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.விவாகரத்து –

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.