'கருத்து சுதந்திரத்தை பறிக்கும் திமுக அரசு' – கிஷோர் கே.சாமி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமியின் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிஷோர் கே சாமியின் கைதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த திமுக அரசு, தமிழ்நாடு பாஜக பெண் தலைவர்களை இழிவாக பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்?

கிஷோர் கே சாமியின் தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழக பாஜக செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமியை புதுச்சேரியில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வு புகைப்படத்தை பகிர்ந்திருந்த கிஷோர் கே.சாமி அவதூறு கருத்து பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கிஷோர் கே.சாமி தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து, புதுச்சேரியில் வைத்து கிஷோர் கே.சாமியை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று (நவ.21) அதிகாலை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.