ஐந்து தோல்விக்குப் பிறகு அசத்துவாரா அதர்வா?

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள இளம் கதாநாயகர்களில் நம்பிக்கை கொடுக்கும் அளவிற்கு தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் அதர்வா. கதாநாயகனாக அறிமுகமாகி பத்து வருடங்களைக் கடந்தாலும் இன்னும் முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் தவித்து வருகிறார். அவர் சரியாகத் தேர்வு செய்யாத சில கதைகள்தான் அதற்குக் காரணமாக அமைந்தன.

கடந்த பத்து வருடங்களில் 15 தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவற்றில் வியாபார ரீதியாக 'ஈட்டி, இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன. 'இமைக்கா நொடிகள்' படத்திற்குப் பிறகு கடந்த நான்கு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த 'பூமராங், 100, தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ட்ரிகர்' ஆகிய படங்கள் அவருக்கு வெற்றியைத் தரவில்லை.

சற்குணம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பட்டத்து அரசன்' படம் இந்த வாரம் நவம்பர் 25ம் தேதி வெளியாக உள்ளது. குடும்பக் கதையாக உருவாகியுள்ள இந்தப் படமாவது அதர்வாவுக்கு வெற்றியைத் தந்தால்தான் தொடர் தோல்விகளில் இருந்து அவர் தப்பிக்க முடியும். 2014ல் வெளிவந்த 'மஞ்சப் பை' படத்திற்குப் பிறகு இயக்குனர் சற்குணமும் நல்லதொரு வெற்றிக்காகத்தான் காத்திருக்கிறார். 'சண்டி வீரன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த சற்குணம், அதர்வா கூட்டணிக்கு வெற்றியைத் தருவாரா இந்த 'பட்டத்து அரசன்' ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.