குஜராத் மாநிலத்திற்கு டிசர்ம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிரது. ஆட்சியை தக்க வைக்க வேண்டுமென பாஜகவும், பாஜகவை விரட்ட வேண்டுமென எதிர்க்கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில், “தகுதி உடைய கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின் இரு சக்கர வாகனம் வழங்கப்படும். மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு தரமான இலவச கல்வி வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். துவாரகாவில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை நிறுவப்படும். 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த பிறகு திராவிட மாடல் என்ற பதம் பிரபலமானது. குறிப்பாக, திமுகவின் இந்த ஆட்சியில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதேபோல், ஸ்டாலினுக்கு முன்னதாக தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களில் கருணாநிதியாகட்டும், ஜெயலலிதாவாகட்டும் இலவசங்களை மக்களுக்கு வழங்கினர்.
ஆனால் இலவசங்கள்தான் மக்களை சோம்பேறியாக்குகின்றன. மாநிலத்தை சீரழிக்கின்றன. இதுதான் திராவிட மாடலா. திராவிட மாடலைவிட மோடியின் குஜராத் மாடல்தான் உயர்ந்தது என பாஜகவினரே கூறிவந்தனர். ஏன் பாஜகவின் டெல்லி தலைமைகள் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் அதைத்தான் கூறினர். ஆனால் தற்போது குஜராத் தேர்தலையொட்டி பாஜக இலவசங்களை வழங்குவதன் மூலம் திராவிட மாடலை குஜராத் மாடல் ஃபாலோ செய்கிறதா என பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.