அடம்பிடிக்கும் பருவமழை… மீண்டும் எப்போது பெய்யும்? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எங்கே? என்று பலரும் தேடும் நிலை தான் காணப்படுகிறது. அதிலும் பெரிய ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் குளிர் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. மிகவும் லேட்டாக தான் விடிகிறது. சீக்கிரமாகவே இரவு வந்து விடுகிறது. பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வட தமிழகத்தை சேர்ந்த மக்கள் கூறி வருகின்றனர். பனி வந்துவிட்டால் அப்புறம் மழை பெய்வது குறைந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.

பொய்க்கும் பருவமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தான் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. அந்த வகையில் நடப்பு பருவமழை காலத்தில் இருமுறை வெளுத்தி வாங்கி விட்டு காணாமல் போய்விட்டது. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையும் நிலப் பகுதிக்கு வராமல் அடம்பிடித்து, பின்னர் வலுவிழந்து மறைந்து போகும் சூழல் தான் காணப்படுகிறது.

வெதர்மேன் அப்டேட்

இப்படி இருந்தால் எப்படி மழை பொழியும்? நடப்பு பருவமழை காலத்தில் மழையின் அளவு குறைவாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இனிமேல் மழையே பெய்யாதா? என்று கேட்பவர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு மற்றும் தெற்கு தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும்.

சென்னை முதல் நாகை வரை டிசம்பர் 1 முதல் 4ஆம் தேதி வரை கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றால் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் ஆகிய மேற்கு மண்டலத்தில் பரவலான மழை இன்று (நவம்பர் 28) பெய்யக்கூடும். கரூரிலும் கொஞ்சம் மழை பெய்யலாம்.

தென் தமிழகத்தில் மழை

இதேபோல் நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இன்றைய தினம் லேசான மழை பெய்யக்கூடும். ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பரவலான மழை மட்டுமே பெய்யும். அதுவும் சில இடங்களில் தான். மற்ற இடங்களில் பெய்யாது.

மீண்டும் புயல்

அடுத்த புயல் டிசம்பர் 2வது வாரத்தில் உருவாகக் கூடும். இந்தோ – சீனா கடல் பகுதியில் உருவாகி 3 முதல் 4 கட்டங்களாக இடம்மாற வாய்ப்புள்ளது. குறைந்த அட்சரேகையில் புயல் நகரும். இது இலங்கைக்கு கீழ் வந்தால் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,

வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.