தில் ராஜு என்ற பிராண்ட்டிற்காக பிரச்சினை செய்கிறார்கள் : 'வாரிசு' வெளியீடு சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் விளக்கம்

தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரிசு'. 2023 பொங்கலுக்கு இப்படத்தைத் தெலுங்கில் வெளியிடுவதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் மறைமுகமான எதிர்ப்பை அறிக்கையாக வெளியிட்டு சர்ச்சையை ஆரம்பித்தது.

2019ம் ஆண்டில் தில் ராஜு சொன்னது போலவே நேரடி தெலுங்குப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. இதனால், 'வாரிசு' படத்தின் தெலுங்கு வெளியீடு குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் தெலுங்கு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்கள் அது குறித்து பேசி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்நிலையில் 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வெளியீடு குறித்த சர்ச்சைக்கு டிவி பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அதில், “2023 பொங்கலுக்கு 'வாரிசு' படத்தை வெளியிடப் போகிறோம் என கடந்த மே மாதமே அறிவித்தோம். பிரபாஸ் நடித்த 'ஆதி புருஷ்' படமும் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவித்திருந்தார்கள். அதனால், வெளியீட்டிற்கு சிக்கல் வந்திருக்கும். நான்கு படங்களை வெளியிட பெரிய பிரச்சினை வந்திருக்கும். ஆனால், 'ஆதி புருஷ்' தள்ளிப் போனது. 'வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி' மற்றும் 'வாரிசு' படங்களை வெளியிட தெலங்கானா, ஆந்திராவில் போதுமான அளவிற்குத் தியேட்டர்கள் உள்ளன.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி' படங்கள் பெரிய படங்கள். ஒரே தயாரிப்பு நிறுவனம் இரண்டு படங்களை ஒரே நாளில் வெளியிடுவது இதுவே முதல் முறை. 'வால்டர் வீரய்யா' படத்தை ஜுன், ஜுலையில் வெளியீடு பற்றி அறிவித்தார்கள். 'வீர சிம்மா ரெட்டி' படத்தின் வெளியீடு அக்டோபரில் அறிவித்தார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களது முந்தைய படங்கள் பலவற்றை நான் வெளியிட்டுள்ளேன்.

பிரச்சினையை ஏற்படுத்தியது தயாரிப்பாளர் சங்கம் தான். எனக்கும் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நிஜாம் ஏரியாவில் 420 தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் நான் 37 தியேட்டர்களை மட்டுமே லீசுக்கு எடுத்துள்ளேன். ஏசியன் சுனில் வசம் 100 தியேட்டர்கள் உள்ளன. மற்ற தியேட்டர்களை அந்தந்த உரிமையாளர்களே நடத்தி வருகின்றனர். இருந்தாலும் எனக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் பலரும் தியேட்டர்களைத் தர முன் வருவார்கள். அது என்னுடைய வியாபாரத்திற்குக் கிடைத்துள்ள மரியாதை. என்னுடைய கண்ட்ரோலில் அனைத்துத் தியேட்டர்களும் இல்லை.

பிரச்சினை இல்லை என்றாலும் பிரச்சினையை சிலர் உருவாக்குகிறார்கள். தில் ராஜு என்று பிராண்ட் இருப்பதால் பிரச்சினை செய்கிறார்கள். சினிமா உலகில் இது சர்வ சாதாரணம்,” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.