நாமக்கல்: மோசடி செய்து வாகனத்தின் பெயர் மாற்றம், குடும்பத்துடன் போராட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரிக் உரிமையாளர் பெரியசாமி என்பவரிடம் மோசடி செய்து போலியாக கையெழுத்திட்டு ரிக் வாகனத்தை பெயர் மாற்றம் செய்த அதிகாரிகளை எதிர்த்து, பெரியசாமி குடும்பத்துடன் போராட்டம் செய்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய ராமலிங்கம் என்ற RTO மற்றும் அவருக்கு உதவி புரிந்த அலுவலர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியசாமி (37), அவர்  மனைவி கவிதா (32) ஆகியோர் அவர்ளது 2 குழந்தைகளுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் முன் உண்ணாவிரத போராட்டம் செய்து வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையம் காந்தி ஆசிரமம் அருகே உள்ள புளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (37). இவருக்கு கவிதா (32) என்ற மனைவியும் கர்ணிகா (7) என்ற பெண் குழந்தையும் நிஷாந்த் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். பெரியசாமிக்கு சித்ரா என்ற மூத்த சகோதரி உள்ளார். இவரது கணவர் சேகரும் பெரியசாமியும் இணைந்து ஸ்ரீ அம்மன் போர்வெல் என்ற நிறுவனத்தை கூட்டாக நடத்தி வந்துள்ளனர். அதில் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரிக்வண்டி மற்றும் சப்போர்ட் வண்டி என இரண்டு வாகனங்கள் இருந்தன. 

இந்த நிலையில் சித்ராவுக்கும் பெரியசாமிக்கும் சொத்து தகராறு ஏற்படவே ரிக் வாகனத்தை பெரியசாமி அக்கா சித்ராவின் கணவருக்கு விட்டுக் கொடுத்து விடுவது எனவும் சொத்துக்கள் முழுமையும் பெரியசாமிக்கு சேர அவர்கள் விட்டுக் கொடுத்து விட வேண்டும் எனவும் பேசி முடிவான நிலையில் சேகருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்படவே முடிவை அமுல்படுத்த சில வருடங்கள் ஆகிவிட்டது.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடல் நலம் தேறிய சேகர் பெரியசாமிக்கு சொத்து ஆவணத்தை மாற்றி தராமல் அவருக்குத் தெரியாமல் அப்போதைய வட்டார போக்குவரத்து அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் உதவியுடன் பெரியசாமியின் கையெழுத்தை போலியாக போட்டு டூப்ளிகேட் ஆவணத்தை வைத்து ரிக் வாகனத்தை சப்போர்ட் லாரியையும் பெயர் மாற்றம் செய்து தனது பெயருக்கு சேகர் மாற்றி உள்ளார் என தெரிகிறது.

இதனை அறிந்த பெரியசாமி புகார் தெரிவிக்கவே அவரை அழைத்து சமாதானம் பேசிய சிலர் மிரட்டி கையெழுத்து வாங்கி சேகருக்கு ரிக் மற்றும் சப்போர்ட் லாரியை உரிமையாக்கி உள்ளனர். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியர் போக்குவரத்து ஆணையாளர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என பலருக்கும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று பெரியசாமி தனது மனைவி கவிதா மற்றும் குழந்தைகளுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 

தன்னுடைய ரிக் வாகனத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்து தரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாகவும் பெரியசாமி தெரிவித்தார். இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.