அசாம் மாநில பல்கலைக்கழகத்தில் ராகிங் கொடுமை தாங்க முடியாமல் மாடியில் இருந்து குதித்த மாணவன்

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் திப்ரூகர் பல்கலைக்கழகம் மிகவும் பிரபலமானது. இங்கு விடுதியில் தங்கிப் படித்து வந்த வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் ஆனந்த் சர்மாவை, சீனியர் மாணவர்கள் நேற்று ராகிங் செய்துள்ளனர். அவர்களின் ராகிங் கொடுமையில் இருந்து தப்பிக்க, பல்கலைக்கழகத்தின் 2-வது மாடியில் இருந்து ஆனந்த் சர்மா கீழே குதித்து விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவரை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார். இதுகுறித்து மாணவரின் தாய் சரிதா சர்மா போலீஸில் புகார் அளித்தார்.

அதில் அவர் கூறும்போது, ‘‘என் மகனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதை செய்துள்ளனர். சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக கடந்த 4 மாதங்களாகவே என் மகன் கூறி வந்தான். அவனிடம் இருந்த பணம், செல்போனை பறித்துள்ளனர். எதிர்காலத்தில் வழக்குகளில் இருந்து தப்பிக்க கட்டாயப்படுத்தி அவன் வாயில் மது ஊற்றி, கஞ்சா புகைக்க வைத்துள்ளனர். அந்த காட்சிகளைப் புகைப்படம் எடுத்து வைத்துள்ளனர்’’ என்று குற்றம் சாட்டியுள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர், தற்போது படித்து வரும் 4 மாணவர்கள் என 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ‘‘ராகிங் இல்லாத கல்விச் சூழலை உருவாக்க மாணவர்கள் உறுதி எடுக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ட்விட்டர் பதிவில் அவர் மேலும் கூறும்போது, ‘‘திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் ராகிங் நடந்தது குறித்து தகவல் வந்துள்ளது. உள்ளூர் நிர்வாகம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. காயம் அடைந்த மாணவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

காயம் அடைந்த மாணவர் தவிர மேலும் 2 ஜூனியர் மாணவர்களையும் சீனியர் மாணவர்கள் சித்ரவதை செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.