ஆட்டோ கட்டணம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை என தெரிவித்து இருந்தார். மேலும், எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுனர்கள் தானாகவே உயர்த்தி வசூலிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதையும், அந்த உத்தரவின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்கக் கோரியும், மின்னணு மீட்டர்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரி இருந்தார்.

இந்த வழக்கு இன்று, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ண குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி வழக்கு குறித்து பதிலளிப்பதாக தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள் நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.