அகமதாபாத்: குஜராத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 93 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு உட்பட 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் 63.30% வாக்குகள் பதிவாகி உள்ளள. இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நாளை 93 தொகுதிகளில் நடை பெற உள்ளது. அங்கு நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
இந்த தொகுதிகளில் மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக, முதல்வர் பூபேந்திர படேலின் கட்லோடியா தொகுதி, ஹர்திக் படேல் விராம்காம் தொகுதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்படுகிறது. அன்றைய தினம் பிற்பகலுக்குள் குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற விவரம் தெரிந்துவிடும். அதேபோல், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளும் டிச.8ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த 2 மாநிலத்திலும் பாஜ மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்று தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* உ.பி., ராஜஸ்தானில் நாளை இடைத்தேர்தல் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில மெயின்புரி எம்பியுமான முலாயம் சிங் யாதவ், கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார். இதனால் மெயின்புரி எம்பி தொகுதி காலியானது. இதே போல் காலியாக உள்ள ராம்பூர், கட்டவுலி எம்எல்ஏ தொகுதிகள், ராஜஸ்தானின் சர்தார்ஷாஹர் எம்எல்ஏ தொகுதி, பீகாரின் குர்ஹானி எம்எல்ஏ தொகுதி, சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர் எம்எல்ஏ தொகுதி ஆகியவற்றிற்கு வரும் டிசம்பர் 5ம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.