இந்தியாவின் எரிசக்தி பற்றாக்குறை சமாளிக்கும் வகையில் பசுமை எரிசக்தியை உருவாக்கும் வகையில் பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடல் அலையின் சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையை சென்னை ஐ.ஐ.டி கண்டுபிடித்துள்ளது.
கடல் அலையின் வேகத்தில் டர்பைன் சுழற்றி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப கருவியை சென்னை ஐ.ஐ.டி தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் 20 மீட்டர் ஆழத்தில் கருவியை நிலை நிறுத்தி ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வில் கடல் ஆழத்தில் அமைக்கப்பட்ட டர்பைன் வேகமாக சுழன்று மின் உற்பத்தி செய்து வருகிறது. சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கருவி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் என சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருவியை சென்னை ஐ.ஐ.டியின் கடலியல் துறை பேராசிரியர் அப்துல் சையது தலைமையிலான குழுவினர் 10 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் அடுத்த தலைமுறைக்கான மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.