இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு வேண்டும்: பிரபல கன்னட நடிகர் சேத்தன் குமார் வலியுறுத்தல்

பெங்களுரு: இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கன்னட நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் சேத்தன் குமார் இந்திய கிரிக்கெட் அணியின் 70% பேர் உயர்சாதிகளை சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு இருப்பதை போல் கிரிக்கெட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்று சேத்தன் குமார் வலியுறுத்தி இருக்கிறார்.

பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி சாதிகளில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களின் ஆட்ட திறன் சிறப்பாக இருக்கும் என்றும் சேத்தன் குமார் குறிப்பிட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்களில் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டதையும் சுட்டிகாட்டி இருக்கிறார்.

தேர்வு குழுவிலும் இடஒதுக்கீடு தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். உயர்சாதிகளை சேர்ந்த வீரர்கள் பெருபான்மையாக உள்ள கிரிக்கெட்டில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது பலரது கோரிக்கையாகும். தற்போது நடிகர் சேத்தன் குமார் கோரிக்கை பலரது வரவேற்பை பெற்றுள்ளது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.