திருவள்ளூர் மாவட்டத்தில் மதுக்கடை சுவற்றில் துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளை அடித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 16ஆம் தேதி நள்ளிரவு திருவள்ளூர் மாவட்டம் மாமண்டூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு, மர்மநபர்கள் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு 250 மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதையடுத்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடையின் மேற்பார்வையாளர் வெங்கடேசன் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், டாஸ்மாக் கடை அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய மேல் திருத்தணியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (29), திருமழிசையைச் சேர்ந்த திருப்பதி(24), கிறிஸ்டோபர் என்கின்ற சதீஷ்(21) ஆகிய 3 பேரை பிடித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தியதில்,nமதுக்கடையில் துளையிட்ட மது பாட்டில்களை கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிருபாகரன்(22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.