இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், சென்னை மாகாண முதல்வர், மேற்கு வங்க மாநில ஆளுநர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூதறிஞர் எனப்படும் ராஜாஜியின், 50 ஆம் ஆண்டு நினைவு நாள் வுரும் 25 ஆம் தேதி (டிசம்பர் 25) அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நாளையொட்டி, அவரை நினைவுகூரும் விதத்தில் தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மூதறிஞர் ராஜாஜி மறைந்த 50 ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு அன்னாரின் பெருமைகளை அடுத்த தலைமுறையினரும் அறிந்து பயன்படுகின்ற வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில், 25.12.2022 அன்று சென்னை, பாரிமுனை, உயர் நீதிமன்ற வளாகம் அருகில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப்பள்ளியில் உள்ள நினைவு இல்லத்திலும் அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்கள்.
மேலும், மூதறிஞர் இராஜாஜி மறைந்த 50ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு அன்னாரின் அரசியல், இலக்கியம், ஆட்சி நிர்வாகம், வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் 24.12.2022 முதல் 01.01.2023 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியினை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் 10.12.1878 இல் பிறந்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள், அண்ணல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் நடந்த உப்பு சத்தியாக்கிரகம் போராட்டத்தினை முன்னின்று நடத்தினார். 1937ஆம் ஆண்டு அன்றைய மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார், தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என நாட்டின் மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்.
மூதறிஞர் இராஜாஜி அவர்கள், இலக்கிய ஆர்வம் மிக்க அவர் அரிய பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். குறிப்பாக, மிகப்பெரிய காவியங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்தினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார். அவர் எழுதிய பல நூல்களில் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ ’வியாசர் விருது’ ஆகிய நூல்கள் மிகவும் பிரபலமானவை. இதற்காக 1858 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும், 1959 ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் சுதந்திரப் போராட்ட வீரராகவும், முன்னணித் தலைவர்களின் வரிசையில் தமிழராய் இடம் பெற்ற மூதறிஞர் ராஜாஜி 25.12.1972இல் இயற்கை எய்தினார்.