புதிய வகை கொரோனா – மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்

புதிய வகை கொரோனா பரவுவதை அடுத்து இந்தியாவில் இது தொடர்பாக முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. விமான நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இந்நிலையில்,  மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், “அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும். உருமாற்றம் பெற்ற கொரோனா இருப்பது கண்டுபிடிப்பதற்கு இந்த பரிசோதனை பயன்படும்.

சீனாவில் பிஎப் 7 கொரோனா அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவில் தற்போது 10 வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பதும், மேலும் பிஎப் 7 இருப்பது கண்டறியவும் மரபணு ஆய்வு உதவும். மேலும் மருத்துவமனையில் போதிய அளவு படுக்கைகள், உபகரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பண்டிகைக் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர பொது இடங்களில் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.