முன்கூட்டியே முடிவடைந்த குளிர்காலக் கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஏற்கெனவே அறிவித்திருந்தார். எனினும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிவடைந்திருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக, அலுவலக பரிந்துரை குழு கடந்த 20ம் தேதி கூடி ஆலோசனை மேற்கொண்டது. அதில், 23 ஆம் தேதியோடு குளிர்காலக் கூட்டத் தொடரை முடித்துக்கொள்வது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் இதனை அறிவித்த சபாநாயகர் ஒம் பிர்லா, மக்களவையின் செயல்திறன் 97 சதவீதமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மாநிலங்களவையின் செயல்திறன் 102 சதவீதமாக இருந்ததாக அவையின் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் விவகாரம், இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மிக முக்கிய விஷயமாக இருந்தது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு அவைகளிலும் விளக்கம் அளித்தார். எனினும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனை அரசு ஏற்கவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து வெளிநடப்பில் ஈடுபட்டன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே கூட்டத் தொடர் நிறைவடைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.