இஸ்லாமியரை குத்தி கொன்ற கும்பல்… மது விற்பனைக்கு தடை – 144 உத்தரவு

கர்நாடகாவின் மங்களூரு புறநகர் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரா பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் டிசம்பர் 27ஆம் தேதி வரை மது விற்பனைக்கு தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜலீல் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஜலீல் தனது கடையின் முன் நின்று கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தாக்குதலுக்கு பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். 

தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல் ஆணையர் சசிகுமார்,”காயமடைந்த அவரின் உயிர் பிரிந்தது. தற்போது அவரின் உடல் உடற்கூராய்வுக்காக ஏஜே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது” என்றார்.

சூரத்கல், பாஜ்பே, காவூர் மற்றும் பனம்பூர் காவல் நிலைய எல்லையில், டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 6 மணி வரை, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் மங்களூரு நகர காவல் ஆணையர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் டிசம்பர் 27ம் தேதி காலை 10 மணி வரை மது விற்பனைக்கு தடை விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.