பேராசிரியர் அன்பழகனின் சிலை அமைக்க தடை கோரி வழக்கு..!!

மறைந்த முன்னாள் அமைச்சரும் திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பள்ளி கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள டி.பி.ஐ வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து கோவை மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் “நடைபாதை, பொது பயன்பாட்டு இடங்கள், பொது சாலை போன்ற இடங்களில் சிலைகள் மற்றும் எந்தவித கட்டமைப்பும் மேற்கொள்ள அனுமதி வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. கல்வி வளர்ச்சிக்காக ஏராளமான தலைவர்கள் பணியாற்றி இருக்கலாம்.

அதற்காக சிலை அமைப்பது என்பது அரசியல் கட்சிகளுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும். அவர்களின் பெயரில் பொதுநல கொள்கைகளை வகுக்கலாம், சிலைகள் அமைப்பது சரியல்ல. கல்வித்துறையில் நலத்திட்டங்களை அரசு அறிவித்திருந்தாலும் சிலை அமைப்பது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. 

மேலும் சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே அன்பழகனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு டி.பி.ஐ வளாகத்தில் சிலை அமைக்கும் முடிவு உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சமமானது. எனவே தமிழக அரசு நீதிமன்றத்தின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என மனு அளித்துள்ளேன்.

எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் எனது மனு மீது உரிய பரிசீலனை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று டி.பி.ஐ வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சில அமைக்க தடை விதிக்க வேண்டும்” என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.