பாட்னா: பீகாரில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 28ம் தேதியும் (நாளை), 30ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்டுள்ள வேட்பாளர் கரிமா தேவி சிக்கரியா என்பவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் நேற்று பெட்டியாவுக்கு வந்தார். அவர், கரிமா தேவி சிக்கரியாவுடன் பேரணியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், அக்ஷரா சிங்குக்கு ஆதரவாக கூச்சலிட்டனர்.
வீடுகளின் மேற்கூரையில் நின்று கொண்டு ஆதரவு கோஷங்களை ரசிகர்கள் எழுப்பினர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிய நடிகை, மேயர் வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவரின் பைக்கில் ஏறிக் கொண்டு மற்றொரு பகுதிக்கு சென்றார். அப்போதும் அவரை விடாத ரசிகர்கள், பைக்கில் பின்தொடர்ந்து வந்து கோஷங்களை எழுப்பினர். ஒருகட்டத்தில் தனது முகத்தை மூடியும், கருப்பு கண்ணாடி அணிந்தவாறு அங்கிருந்து நடிகை அக்ஷரா சிங் தப்பினார்.