ஆன்லைன் வேலைக்காக பணமிழந்த இல்லத்தரசிகள்.!! ஆறு பேர் கைது.!

தற்போது ஆன்லைனில் பகுதி நேர வேலை மற்றும் முழுநேர வேலை என்ற பெயரில் பண மோசடி நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று போலீசார் ஆன்லைனில் பண மோசடி செய்த கும்பலை விசாகப்பட்டினம் போலீசார் கைது செய்தனர். 

அவர்கள் அனைவரும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமன் சா, ராஜஸ்தான் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுபம் சிங், தீபக் சக்ரா, ரன்வீர் சவுகான், மிட்டு லா ஜாட் மற்றும் விகாஸ் பாசிந்தா உள்ளிட்டவர்கள் ஆவர்.

இவர்களிடம் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட செல்போன்கள், இருபது சிம்கார்டுகள், 26 ஏடிஎம் கார்டுகள், முப்பத்தேழு வங்கி காசோலைகள், 56 போலி முத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த கும்பலிடம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் மட்டும் முப்பத்தெட்டு இல்லத்தரசிகள், இருபத்தொன்று வேலையில்லாத இளைஞர்கள், மூன்று தனியார் ஊழியர்கள், ஐந்து அரசு ஊழியர்கள், இரண்டு மருத்துவர்கள் உட்பட மொத்தம் எழுபத்தெட்டு பேர் 2.45 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளனர். 

இந்த மோசடி சம்பவம் குறித்து, விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஸ்ரீகாந்த் தெரிவித்ததாவது, ஏமாற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இல்லத்தரசிகள். அதனால், பகுதி நேர வேலை என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். 

ஆன்லைனில் வேலை செய்யாமல் பணம் தருவதாக கூறுபவர்களிடம் ஏமாறாதீர்கள். இதற்காக ராஜஸ்தானில் இருந்து வருபவர்கள் மீது விசாகப்பட்டினம் போலீசார் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற கும்பல் நாடு முழுவதும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.