பிரதமர் மோடியின் தாயார் மறைவு: அகமதாபாத் விரைந்த மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 100.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி குஜராத், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். பிரதமர் மோடி குஜராத் செல்லும் போதெல்லாம் தனது தாயாரை சென்று சந்தித்து வருவார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகும்.

இந்நிலையில் ஹீரா பென் மோடியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் (டிசம்பர் 28) அவர் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி நேற்று முன் தினம் மதியம் அகமதாபாத்துக்கு விரைந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக அவர் தாயார் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தார். அங்கு அவர் தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார். அங்கிருந்த மருத்துவர்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றியும் விசாரித்து அறிந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் குஜராத் மாநில அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

“ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்துள்ளது… துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் நான் எப்போதும் அவரிடம் உணர்ந்திருக்கிறேன். அவருடைய 100ஆவது பிறந்தநாளில் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயம் சொன்னார், எப்போதும் நினைவுக்கு வரும், புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள்” என்று பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தாயாரின் மறைவை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத் விரைந்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள வந்தேபாரத் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.