மானாமதுரை அருகே கண்மாயில் களை கட்டிய மீன்பிடி திருவிழா: ஜிலேபி, கட்லாவை அள்ளிச் சென்ற மக்கள்

மானாமதுரை: மானாமதுரை அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வாளிகளில் கிலோ கணக்கில் மீன்களை பிடித்து சென்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நவத்தாவு கிராமத்தில் உள்ள கண்மாயில் நீர் வற்றியதால் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக, நேற்று அதிகாலை கிராம தெய்வங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர் கிராமத்தினர் கண்மாயில் இறங்கி கச்சாவலை, சேலை, கண்ணுபொடிவலை போன்ற வலைகளுடன் மீன்களை பிடிக்க துவங்கினர். ஒவ்வொருவருக்கும் 5 முதல் 10 கிலோவிற்கு மேல் நாட்டுரக மீன்களான கெண்டை, ஜிலேபி, கட்லா, ரோகு, கெழுத்தி, அயிரை ஆகியவை கிடைத்தன. மீன்களை வாளிகளில் அள்ளிச் சென்றனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்து நவத்தாவு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ், முத்தையா கூறுகையில், ‘‘ஐந்து ஆண்டுகளுக்கு பின் கண்மாயில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் ஒவ்வொருவருக்கும் பத்து கிலோவிற்கு மேல் மீன்கள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பதுடன் மீன்களும் குறையாமல் கிடைக்க இயற்கை அருளவேண்டும்’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.