புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்து கொண்டிருந்தது. அப்போது பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த ஒரு பயணி, சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த நபர் மது போதையில் இருந்தார்.
இதுதொடர்பாக ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்களிடம் அந்த பெண் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு புதிய ஆடைகளை வழங்கிய பணிப்பெண்கள் அதே இருக்கையிலேயே அமருமாறு தெரிவித்தனர். விமான இருக்கைகள் முழுவதும் நிரம்பியிருந்ததால் அவ்வாறு அவர்கள் தெரிவித்தார். விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், தவறு செய்த நபர் மீது எந்த நடவடிக்கையையும் ஏர் இந்தியா நிர்வாகம் எடுக்கவில்லை. இது அந்த பெண்ணுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு அந்த பெண் புகார் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து அந்த நபர் அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய சிவில் விமானப் போக்குவரத் துத்துறை பொது இயக்குநரமும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏர் இந்திய நிறுவனத்திடமிருந்து விளக்கம் கிடைத்ததும் அந்த நபர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.