தந்தை கொடுத்த நெருக்கடியால் மன அழுத்தம்; ‘நீட்’ தேர்வுக்கு படித்த மாணவர் தீக்குளிப்பு: கோட்டா மையத்தில் ஓராண்டில் 15 பேர் தற்கொலை

கோட்டா: கோட்டா பயிற்சி மையத்தில் படித்த நீட் தேர்வர், தந்தை கொடுத்த நெருக்கடியால் தீக்குளித்தார். இப்பகுதி மையங்களில் கடந்தாண்டு மட்டும் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலம் மேற்கு சம்பாரானில் வசிக்கும் 20 வயது இளைஞர், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த மாதமாக ஜவஹர் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட தல்வாண்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் விடுதி அறையில் இருந்த மாணவர், தனது உடலில் எரிபொருளை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவனைமயில் சேர்ந்தனர். அவரது உடலில் 60% அளவிற்கு தீக்காயங்கள் உள்ளதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர் நீரஜ் தேவந்தா தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பீகாரை சேர்ந்த இந்த மாணவர், ராஜஸ்தானில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இவரை போன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தில் படித்து வருகின்றனர்.

நீட் தேர்வில் தீவிர கவனம் செலுத்துமாறு அவரது தந்தை போனில் பேசி வந்துள்ளார். சம்பவ நாளன்று அவரது அவரது தந்தை சஞ்சய் குமார், கோட்டா நகருக்கு வந்தார். அப்போது தனது மகனை சந்தித்து, இந்தாண்டு நீட் தேர்வில் எப்படியும் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு சென்றுள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவர், தனது உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மாணவரின் உடல் மற்றும் முகத்தின் மேல் பகுதியில் 60 சதவீத தீக்காயங்கள் இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றனர். பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான பயற்சி மையங்கள் கோட்டாவில் உள்ளன. வடமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த மையங்களில் அதிகளவில் சேர்ந்து படிக்கின்றனர். கடந்தாண்டில் மட்டும் மன அழுத்தத்தின் காரணமாக 15 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.